கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை வழங்குவதில் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கொரோனாவால் உயிரிழந்தவர் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை வழங்குவது குறித்த விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி அடங்கிய மாவட்ட குழுவை அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என மாவட்ட குழுக்களுக்கு உத்தரவிட்டனர்.
கொரோனா மரணம் என குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என தெரிய வந்தால், ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.