தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய பாதிப்புகளை விட இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,063-ஐ விட அதிகமாகும். தலைநகரான சென்னையில் 616 கொரோனா பாதிப்புகளும், செங்கல்பட்டு 266, கன்னியாகுமரியில் 62, திருவள்ளூரில் 71, திருநெல்வேலியில் 29 புதிய கொரோனா பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 65 ஆயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 621 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 21 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 26 என்ற அளவில் உள்ளது.








