அதிமுகவிற்கு ஒற்றை தலைமை இருப்பது தான் நல்லது எனச் சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர் எம்.பி, மத்தியலேயோ மாநிலத்திலேயோ ஆளும் கட்சி எப்படி முக்கியமோ அதுப்போல் பிரதான எதிர்கட்சி வலுவாக இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது. அதிமுகவில் யார் இருக்க வேண்டும் என்பதைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டிய விசயம். ஆனால் ஒரு கட்சி பலமா வலுவா நடப்பதற்கு ஒற்றை தலைமையில் செயல்படுவது தான் சிறப்பு. இந்தியாவில் தேசிய, மாநில என்று எந்த கட்சியாக இருந்தாலும் ஒருவர் தான் தலைவராக இருப்பார்கள். இரட்டை தலைமை எந்த கட்சியிலும் நடைமுறை கிடையாது. அதிமுக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் ஆட்சியிலிருந்த கட்சி. தற்போது பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஒருத்தரின் தலைமையில் கட்சி இயங்குவது ஜனநாயக ரீதியாக அந்த கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது எனக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், சட்ட ரீதியான பிரச்சனைகளில் இரண்டு பேரும் ஒற்றுமையாக இல்லாத போது அடுத்த கட்டமாகச் சந்திக்கத் தான் செய்வார்கள். இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும். சசிகலாவைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளப் போவதாக இருவரும் சொல்லவில்லை. சசிகலாவிடம் கட்சியும் இல்லை. சசிகலா உள்ளே வந்து கட்சியைக் கைப்பற்றுவது என்பது சாத்தியமில்லை எனத் தெரிவித்தார். மேலும், டெல்லியில் ராகுல்காந்தியை விசாரணை என்ற பெயரில் மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. தொடர்ந்து 7 நாட்கள் 60 மணி நேரம் விசாரிக்க ஒன்றும் இல்லை எனவும், அக்னிபாத் என்ற திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்களை எடுப்பது பலவீனப்படும். இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கும் என்பதால் எதிர்க்கின்றனர். எனவே, நிரந்தரமாக வேலை வாய்ப்பு தர வேண்டும் என அவர் கூறினார்.