தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்துவருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது.
இந்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
- பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்
- நீர்நிலைகளுக்கு சென்று குளிக்க வேண்டாம்
- நீர்நிலைகளுக்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்
- தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
- குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.







