தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் எப்போது பேச்சு? கார்த்தி சிதம்பரம் தகவல்!

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தையை துவங்க உள்ளதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ்…

திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து விரைவில்
பேச்சுவார்த்தையை துவங்க உள்ளதாக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

மதுரை காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி
பிரமுகரின் இல்ல விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

“அயோத்தி கோயில் திறப்பு நிகழ்வை காங்கிரஸ் கட்சி அரசியலாக தான் பார்க்கிறது.  மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம்.  கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றுவதில் தவறில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி முழுமையாக தயாராக உள்ளது.  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.   தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி கட்டினால் ஒன்றிய அரசு ஒரு ரூபாய்க்கு குறைவாகவே நிதி வழங்குகிறது.  வடமாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு குறைவாக வரி கட்டினால் ஒரு ரூபாய்க்கு அதிகமாகவே நிதி வழங்குகிறது.

இதையும் படியுங்கள்: மக்களவை தேர்தல் பணியை துவங்கியது அதிமுக: 4 குழுக்களை அமைத்து இபிஎஸ் உத்தரவு!

முன்னேறுகிற மாநிலங்களில் கல்வி,  சுகாதாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசு மறுக்கிறது.  நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மேலிடப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  திமுகவுடன் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தையை துவங்க உள்ளோம்.

காங்கிரஸ் கட்சி அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அடையாள அட்டை வழங்கி உள்ளோம்.

அயோத்தி கோயிலை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள.  10 ஆண்டுகளாக பாஜக செய்த திட்டங்களில் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.