தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை எதிர்த்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக Hindustan Oil Exploration நிறுவனம், தமிழ் நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான கழக ஆட்சியில், கடலூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது, கடலில் இக்கிணறுகள் அமைக்க Hindustan Oil Exploration நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில், இக்கிணறுகளை அமைப்பதற்கு அதிகப்படியான துளையிடுதலாலும், அதன்மூலம் ஏற்படும் அதிக சத்தத்தாலும், நச்சு ரசாயனக் கழிவுகளாலும் கடல் வாழ் உயிரினங்கள் அழியவும், இனப் பெருக்கம் குறையவும், சுற்றுச் சூழல் பாதிப்பும் ஏற்படுவதோடு, கடலையே நம்பி வாழும் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும். மேலும், கடற்கரை ஓரம் உள்ள சதுப்பு நிலத்தின் தன்மையும், அங்கே வளரும் மாங்ரோவ் இன காடுகளும் அழியும் அபாய நிலையும் உருவாகும். இவைகளின் காரணமாக, மக்களின் பொருளாதார நிலை வெகுவாக சீர்கெட்டுவிடும்.

இந்நிலையில், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் Hindustan Oil Exploration நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும்; கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் சேரவைத்து, குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் சார்பில், 29.7.2026 புதன் கிழமை காலை 10 மணியளவில், பரங்கிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார் அவர்கள் தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான சொரத்தூர் இரா.ராஜேந்திரன், M.LA., கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான M.C. தாமோதரன், Ex. M.P., கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் K.A.பாண்டியன், Ex. M.L.A., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.