சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.
புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2022-23-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. நடை திறக்கப்பட்ட முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 14-ந் தேதி அன்று புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை, ஜோதி தரிசனம் நடந்தது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முன்தினம் வரை நெய் அபிஷேகம் நடந்தது. நேற்று இரவு மாளிகை புரத்தம்மன் கோவிலில் குருதி பூஜை சடங்குகள் நடந்தது.
இந்தநிலையில் இன்று காலையுடன் மண்டல, மகரவிளக்கு பூஜை நிறைவு பெற்றது. இதனையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டிகள் சன்னிதானத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. திருவாபரண பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.