மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் திட்டமான ‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் தொடக்கத்தின் போது 75,000 பேருக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது இந்த திட்டத்தின் மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட உள்ளன. பிரதமர் மோடி கானொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கி அவர்களிடம் உரையாற்ற இருக்கிறார்.
ஜூனியர் இன்ஜினீயர், லோகோ பைலட், தொழில்நுட்ப உதவியாளர், உதவி ஆய்வாளர், ஸ்டெனோகிராபர், வருமான வரி இன்ஸ்பெக்டர்ஸ், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு புதிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பணி ஆணை பெறவுள்ள இவர்களுக்கு தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான `கர்மயோகி’ திறன் மேம்பாட்டு வகுப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.







