பாஜகவை வீழ்த்துவதே இடதுசாரிகளின் ஒரே நோக்கம் என என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள ஆனி ராஜா, நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
ராகுல் காந்தி எம்பியாக உள்ள கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராகுல் காந்தி எந்தத் தொகுதியில் போட்டியிடுவாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் வசந்தி எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா அளித்த பதிலை தற்போது பார்க்கலாம்….
கேரளாவில் எப்பொழுதும் காங்கிரஸ்-க்கும் இடதுசாரிக்கும் தான் போட்டி. நான் ராகுல் காந்திக்கு எதிராகவோ ராகுல் காந்தி எனக்கு எதிராகவோ போட்டியிடவில்லை. அப்படி கூறுவது தவறு. சித்தாந்தரீதியாக தான் இரு கட்சிகளுக்கு இடையே போட்டி. காங்கிரஸ் வேட்பாளர் வேண்டுமா? இடதுசாரி வேட்பாளர் வேண்டுமா? என்பது மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இடதுசாரிகளுக்கு எதிராக போராடப் போகிறார்களா? பாஜகவுக்கு எதிராக போராட போகிறார்களா? என்பது குறித்து காங்கிரஸ் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
எங்களின் நோக்கம் பாஜகவை வீழ்த்துவது. கேரளாவில் பிறந்தாலும் தமிழ்நாட்டிற்கு வாழ வந்தேன். என்னை இரு கரங்களில் ஏந்தி கொண்டது தமிழ்நாடு. எல்லா மக்களையும் அரவணைத்து அன்பாக ஆட்சி மற்றும் சமூக நீதியை முன்னெடுத்து செல்லும் விதமாக தமிழ்நாடு அரசு உள்ளது. அதில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
மதசார்பற்ற நாடாக இருக்கக்கூடிய இந்தியாவை மதத்தின் பெயரால் ஆட்சியை நடத்தி வருகிறது பாஜக. சிறுபான்மையினருக்கு எதிராக அச்சுறுத்தலை தருகிறது. அதனை இடதுசாரிகள் நாங்கள் எதிர்க்கிறோம் . இந்நிலையில், இடதுசாரிகளுக்கு எதிராக போட்டியா? அல்லது பாஜகவுக்கு எதிராக போட்டியா? என்பதை காங்கிரஸ்தான் தெளிவுபடுத்த வேண்டும் என ஆனி ராஜா கூறியுள்ளார்.