போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் சேர்த்து புதிய ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் மாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் 5 பேர் மற்றும் மூன்று தொழிற்சங்கங்கள் அக்குழுவில் இணைக்கப்பட்டன. இதையடுத்து கூடுதல் தொழிற்சங்கங்களை இணைக்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, தற்போது கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் தொழிலாளர்களுக்கு, போக்குவரத்துக் கோட்ட மாறுபாடின்றி ஒரே விதமான தண்டனை வழங்கும் வகையில், இக்குழு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள உள்ளது.







