கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் போது மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
அப்போது பண்ருட்டி அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் மனைப்பட்டா வழங்க உரிய அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர்கள், கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : செங்கல்பட்டு : 30 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்!
தொடர்ந்து 50 முறைக்கும் மேலாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உடனயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் கோஷமிட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தினர்.
– ஸ்ரீ மரகதம்







