கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாணைக்கு மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.
கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கோயம்புத்தூர் சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, கோவை சம்பவம் தொடர்பாக விசாரணை நிலவரம், கைது நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட உத்தரவிட்டதோடு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
தமிழக அரசு அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.








