தனக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது என்றும், அதற்கு நடிகர் கமல்ஹாசனையும் விஜயையும் அழைத்துள்ளதாகவும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அரிது அரிது, பொறியாளன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய கேம் ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த ’பியார் பிரேமா காதல்’ திரைப்படம், இவரது திரைப் பயணத்தில் தனி அடையாளத்தை உருவாக்கித் தந்தது. தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, Oh மணப்பெண்ணே முதலிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக ஹரிஷ் கல்யாண் வலம் வருகிறார்.
அண்மையில் நர்மதா உதயகுமார் என்பவருடன் தனக்கு திருமணம் நடைபெறப் போவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமணத்தை முன்னிட்டு சென்னை வடபழனி பிரசாத் லேபில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தனது திருமணம் நாளை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்க உள்ளதாகவும், அதற்கு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
மேலும் இந்த திருமணமானது பெற்றோர்களால் பெண் பார்த்து, பேசப்பட்டு, நிச்சயக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும், தனக்கு ஆதரவு அளித்த அனைவரும் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பதை மட்டுமே கருத்தில் கொள்வேன். நாளை திருமணத்திற்காக நிறைய பிரபலங்களை அழைத்துள்ளதாகவும், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் ஆகியோரையும் அழைத்துள்ளதாகவும், அவர்கள் திருமணத்திற்காக வருவார்கள் என நம்புவதாகவும் கூறினார்.








