நிகழ்வில் சற்று தள்ளி நின்ற முதலமைச்சரை அழைத்து அவருடன் சேர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார் பிரதமர் மோடி.
பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதலில் பேசிய முதலமைச்சர், மாநிலத்தின் உரிமைகள், திராவிட மாடல், வரிப் பகிர்வு உள்ளிட்டவை குறித்து அழுத்தமாக எடுத்துரைத்தார். அதுபோலவே தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோரிக்கையான நீட் தேர்வு விலக்கு தொடர்பாகவும் வலியுறுத்தினார். முதலமைச்சர் பேசி முடித்ததும் எழுந்து நின்று கைகொடுத்து வாழ்த்தினார் பிரதமர்.
இதனைத் தொடர்ந்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, சற்று தூரம் தள்ளி நின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அருகில் வரக்கூறி அழைத்து ரிமோட் மூலம் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர்.
அதுபோலவே ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வீடுகளுக்கான சாவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று தள்ளி நின்றார். அவரை அருகில் அழைத்த பிரதமர், சிரித்தபடியே கையைப் பிடித்து சாவியை பயனாளிக்கு தர வைத்தார். அப்போது முதலமைச்சரும் சிரித்தார். தொடர்ந்து பிரதமர், முதலமைச்சர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என மூவரும் சேர்ந்த பயனாளிகளுக்கு சாவியை வழங்கினர்.







