பிரதமர் முன்னிலையில் திராவிட மாடல் குறித்து விளக்கமளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ரயில்வே, நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. மேடையில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இணையமைச்சர் எல்.முருகன் இடம் பெற்றிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு பல்வேறு வகைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் என பல வகைகளில் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தமிழ்நாடு பங்களித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது” என்று கூறினார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல…சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. இதைத்தான் திராவிட மாடல் என அழைக்கிறோம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், “ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பைத் தருகிறது என்பது பிரதமருக்கு நன்றாகத் தெரியும். ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதம். ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 சதவிகிதம்” என பட்டியலிட்டார்.
ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டிற்கு பகிர்ந்து அளிக்கப்படுவது 1.23 சதவிகிதம் மட்டும்தான். தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரத்திற்கும் அளிக்கும் பங்களிப்பிற்கு ஏற்ப ஒன்றிய அரசும் திட்டங்கள், நிதிகளில் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும். அதுதான் உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியாக அமையும்” என்று தெரிவித்தார்.
இறுதியாக, “உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம். எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கை எய்திட அனைவரும் இணைந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்” என்றும் கூறி உரையை நிறைவு செய்தார்.