அதிமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்வதற்காகவே மக்கள் சபை கூட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
கோவை செல்வபுரம் மற்றும் ராஜ வீதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களின் தேவை அறிந்து அதிமுக அரசு செயல்படுவதாக குறிப்பிட்டார். கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும், மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின், உண்மையிலேயே கிராம சபை கூட்டத்தை நடத்தி இருந்தால், கோவையில் குறையை சுட்டிக்காட்டிய பெண்ணுக்கு அவர் பதில் அளித்திருப்பார் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஊழலுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர்தான் என்று குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை எதிர்கொள்ள சக்தியற்ற தலைவராக ஸ்டாலின் உள்ளதாக விமர்சித்துள்ளார். அதிமுக அரசை பற்றி குறை சொல்வதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுகவிற்கு மடியில் கனம் இல்லை; அதனால் பயமில்லை என்றும் கூறியுள்ளார்.







