பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் தமிழக பயணம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, 2 நாட்கள் பயணமாக வரும் 30 மற்றும் 31 ஆம் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சி.டி. ரவி தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவி, தமிழகத்தில் பாஜக மேற்கொண்ட வெற்றிவேல் யாத்திரை, நம்ம ஊரு பொங்கல் ஆகிய நிகழ்ச்சிகள், மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். ஜே.பி.நட்டாவின் தமிழக வருகை, பாஜகவின் வளர்ச்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என சி.டி.ரவி தெரிவித்தார்.







