தமிழ்நாட்டில் காலராவா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

காலரா பரவலை தடுக்க புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை ராஜிவ்காந்தி சாலை கண்ணகி நகர் பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்…

காலரா பரவலை தடுக்க புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜிவ்காந்தி சாலை கண்ணகி நகர் பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1.49 கோடி செலவில் அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் துவக்கி வைத்தார். இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 39 பேருக்கு காலரா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில அரசு அதற்கான செய்திகுறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காரைக்காலை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருமருகள், கணபதிபுரம், நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் திருக்கடையூர், சங்கரன் பந்தல், திருவாரூர் மாவட்டத்தின் கொல்லாபுரம், வெல்லாங்குடி ஆகிய காரைக்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று தமிழக பொதுசுகாதார துறையின் இயக்குனர் நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று அங்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து ஆய்வு செய்து, பொது இடங்களில் மலம் கழிப்பதனால் ஏற்படும் நோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது என்று கூறினார்.

மேலும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றிற்கு தேவையான அளவு மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு காய்ச்சிய தண்ணீரை பருகுதல், உணவை நன்றாக வேகவைத்து உண்ணுதல் ஆகிய விழிப்புணர்வுவை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். புதுவைக்கு அருகே இருப்பதால், நோய் பரவும் அபாயம் காரணமாக காரைக்காலுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்காணிப்பினை வலுப்படுத்த பொதுசுகாதார துறை சார்பாக குழு ஒன்றினை அனுப்பியுள்ளோம் என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், இதுவரை தமிழகத்தில் 11 கோடியே 42 லட்சத்து 32 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனோ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  அதன்படி 31வது மெகா தடுப்பூசி முகாம் வருகின்ற பத்தாம் தேதி ஒரு லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது. 110க்கும் மேலான நாடுகளில் BA4,BA5 என்கின்ற வைரஸ் பரவி பெரிய அளவிலான பாதிப்பை உண்டாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிலும் பல இடங்களில் இந்த வகை வைரஸ் பரவ துவங்கியுள்ளது. முக்ககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என முதல்வர் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் கடந்த வாரம் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் கல்வி நிறுவனங்களில் முகக்கவசம் அணிவது கண்காணிக்கப்படுகிறது. அதே போல் அரசியல் நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிவதை கண்காணிப்பது குறித்து உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், முகக்கவசம் அணிவது அதிகரிக்கப்படும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.