மதுரை சித்திரைத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, ஸ்ரீ கங்காளநாதர் மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் நிகழ்வின்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
விழாவின் 7ஆம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு பதிலாக ஸ்ரீ கங்காளநாதர், மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். மாசி வீதியில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்காளநாதரை தரிசனம் செய்தனர். இதனிடையே கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர்கோயிலில் இருந்து வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
அழகர்கோயிலில் சித்திரைத் திருவிழா நாளை தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தங்ககுதிரை வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம் ஆகியவை சிறப்பு பூஜையுடன் அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக, அழகர் கோவிலில் இருந்து கருட வாகனம் புறப்படும்போது, வானில் கருடன் வட்டமடித்தது.







