ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய குழந்தை ; உடலை கேடயமாக்கி காப்பற்றிய தந்தை – வைரலாகும் காணொலியின் பிண்ணனி…!

வங்காளதேசத்தில் ஓடும் ரயில் ஒன்றின் கீழே சிக்கிய குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் தந்தையின் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வங்க தேசத்தில் உள்ள பிரம்மன்பாரியாவிலிருந்து பைரப் நகருக்கு கணவன், மனைவி ஆகியோர் தங்கள் குழந்தையுடன் ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது ஒரு ரயில் நிறுத்ததில் ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது தந்தையின் கையில் இருந்த குழுந்தை நழுவி ரயிலுக்கும் நடைமேடை விளிம்புக்கும் இடையேயான குறுகிய இடைவெளியில் விழுந்தது. ரயில் புறப்படும் போது அவர் இறங்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை உடனடியாக தண்டவாளத்தில் குதித்தார். குழந்தையை தன் உடலோடு அணைத்த படி தண்டவள சுவரோடு ஒட்டிக்கொண்டார். சுமார் எட்டு பெட்டிகள் கொண்ட அந்த ரயில் அவர்களின் உடலுக்கு சற்று உயரத்தில் கடந்து சென்றது. ரயிலின் வேகம் காரணமாக சுற்றி இருந்தவர்களால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை.

தொடர்ந்து ரயில் கடந்து சென்றதும் தந்தை மற்றும் குழந்தை இருவரும் நடைமேடைக்கு ஏறினர். அவர்கள் பெரிய காயங்கள் இன்றி தப்பித்தனர். மேலும் அங்கு இருந்தவர்கள் அந்த தந்தையின் செயலை கைதட்டிப் பாராட்டினர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.

 

ஆபத்தான சூழ்நிலையிலும் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய அந்தத் தந்தையின் தைரியத்தையும் நிதானத்தையும் பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.