டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான கால வரம்பினை நீட்டிக்க வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திசிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும் என்று கோரி, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்கு பருவமழையினால் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கிய விவசாயிகள் பயிர்க்காப்பீட்டிற்கான பதிவினை சிறப்பாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளினால் தொடர்ச்சியான விடுமுறைகள் காரணமாக பொதுசேவை மையங்கள், நிதி நிறுவனங்களின் சேவைகளை பல விவசாயிகள் பெற முடியாததால், பயிர்க் காப்பீட்டிற்கான பதிவினை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை.
அதனை தொடர்ந்து இடைவிடாத மழை பெய்து வருவதாலும், வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் அதன்காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்தடை ஆகிய காரணங்களால் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஏற்கெனவே, பயிர்க்காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 15-11-2022 என்ற காலவரம்பினை, 30-11-2022 வரை நீட்டிக்குமாறு மேற்படி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்குறிப்பிட்டுள்ள காரணங்களால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், தேனி, திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, தருமபுரி, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய 27 மாவட்டங்களில் பயிரிடப்படும் இரண்டாம் போக நெல் சாகுப்படிக்கான பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவினை வரும் 30ம் தேதி வரை நீட்டிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.