ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது அல்ல என்று அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கான அறங்காவலர் குழு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டத்திற்கு புறம்பாக பிரச்சாரம் செய்யவில்லை. அனைவரும் திமுக கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். நாங்கள் செல்லும் இடமெல்லாம் கை சின்னத்திற்கே அதிக செல்வாக்கு இருக்கிறது. அதை களத்தில்
நாங்கள் கண்கூடாக பார்த்தோம்.
இதையும் படியுங்கள் : 3 கோயில்கள், பல கோடி மதிப்பிலான 2 சாமி சிலைகளை காணவில்லை! – பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
அதிமுகவிற்கும் திமுகவிற்கும் புரிந்துணர்வு இருப்பதாக கூறுவது முட்டாள்தனமான வாதம். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விஷயத்திலும் மக்கள் முன்பாக அறிக்கையை வைத்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் துவங்கும்.
ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது தேர்தல் விதிமுறை மீறல் அல்ல. பெண்களுக்கான உதவித்தொகை குறித்து எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்குதான் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கான வாக்குறுதியை பரப்புரையில் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.
இருப்பினும் இது தொடர்பாக அதிமுக வழக்கு தொடர்ந்தால், அதனை திமுக சந்திக்க தயார். அதிமுக தொடர்பான வழக்கில், நீதிமன்றம் அவர்களுக்கு கீழமை நீதிமன்றங்களின் வாய்ப்பை அளித்துள்ளது. கீழமை நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளிக்கிறதோ, அதை பொறுத்துதான் அதிமுக நிலைமை தெரியவரும்.
திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று கூறுவதை போல், ஆர்.கே.நகரில் ஒரு ஃபார்முலா நடத்தப்பட்டதை பற்றி யாரும் கூற மறுப்பது ஏன்? அமைச்சர்கள் அனைவரும் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக சென்றோம். அதை தவிர எந்த விதமான தேர்தல் விதிமுறைகளையும் மீறவில்லை.