டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்.

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர், துறையின் செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள், என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முதலாவது பணி நியமன ஆணையை நிறைமாத கர்ப்பிணி அட்சய லக்‌ஷ்மிக்கு முதலமைச்சர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார், துறையின் தலைவர் ராதாகிருஷ்ணன், துறையின் அரசு செயலர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.