அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்துசமய அறநிலையத்துறை எடுத்துக்கொண்டது குறித்து பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமானிய மக்களை பாதிக்ககூடிய பிரச்னைகளில் பாஜக உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
டீசல் விலை, பெட்ரோல், கேஸ் விலைகள் உயர்ந்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் நாங்கள் வலியுத்தி வருகிறோம் என்றும், அரசுக்கு வரவேண்டி நிதியை பெறுவதற்கு துறை அமைச்சரையும், பிரதமரையும் டெல்லி சென்று சந்தித்து வந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வரவேண்டி நிதியை பெற்று தருவதற்கு பாஜக உறுப்பினர்கள் உறுதுணையான இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், மாநில மக்களுக்கு எது சாதகமோ அதனை புரிந்து கொண்டு பாஜக உறுப்பினர்கள் செயல்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர், அரசியலை புகுத்தி தங்களுடைய கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்கவே நடக்காது என தெரிவித்தார்.







