மயங்கி விழுந்த இளைஞரை முதலுதவிக்காக தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் இடர்பாடுகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், காவல்துறையினரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை டி.பி.சத்திர கல்லறையில் மரம் விழுந்து விட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மீட்பு பணிக்காக காவல்துறையினர் விரைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அங்கே பணிபுரியும் ஊழியர் ஒருவர் மயங்கிய நிலையில் சுருண்டு கிடந்துள்ளார். இதனைக்கண்ட டி.பி. சத்திரம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சற்றும் தாமதிக்காமல் தனது தோள்களில் சுமந்து சென்று, ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் டிபி சத்திரம் கல்லறையில் பணிபுரியும் உதய் என்பது தெரியவந்தது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞரை தோளில் சுமந்து சென்று முதலுதவி அளிக்க உதவிய பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.