சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் ஐந்து நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர்.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லூப் சாலையின் மேற்குபகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, சென்னை நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கடைகள் அகற்றப்பட்டதை எதிர்த்து கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மீன்கடைகளை ஒழுங்குபடுத்த ஆணையிட்டது. ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்றும் அறிவுறுத்தியது.
அதன்படி மீனவர்களுக்கு கடைகள் ஒழுங்குபடுத்தி கொடுக்கப்படும் என்று மாநகராட்சியும் உறுதியளித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஐந்து நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








