சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் மதிவேந்தன், சென்னை மெரினா கடற்கரையில் ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
75வது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள 75 சுற்றுலாத்தலங்கள் விளம்பரப்படுத்தப்படும் என்றும், சுற்றுலா துறை சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காக தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும் என்றும், தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரான பூம்புகார் புனரமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டப்படும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதமாக மதுரை, கொடைக்கானல் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.