செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உலக அளவில் பனிப்பொழிவானது அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவானது அதிக அளவில் காணப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டு வருகிறது . குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிகுள்ளாகினர். மேலும் பழவேலி, மறைமலைநகர் , கூடுவாஞ்சேரி சிங்கப்பெருமாள் கோவில், ஊரப்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், பொழிச்சலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது. வெள்ளை போர்வை போர்த்தியது போல கடுமையான பனிப்பொழிவு சாலை முழுவதும் இரவு நேரத்தை போலவே காட்சியளித்தது.
இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் எதிரே வரும்
வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமப்பட்டனர். அனைத்து வாகனங்களும் தங்களது முகப்பு விலக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். காலை 8 மணி மேலாகியும் கூட வாகனங்களில் முகப்பு விளக்குகள் போட்டுக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது . அந்த அளவிற்கு கடும் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் காணப்பட்டது.
அதே போல தென் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் ரயில்களும் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஊட்டி கொடைக்கானலை விட , சிக்கிம் போன்ற இடங்களில் ஏற்படும் பனிப்பொழிவு போல் தற்போது தமிழகத்திலும் பல இடங்களில் பனிப் பெய்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
- பி. ஜேம்ஸ் லிசா