எடப்பாடி பழனிசாமியுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசும் நிகழ்வு எங்கேயும் எந்நேரத்திலும் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விமானம் மூலம் மதுரைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்றார். அப்போது ஓ பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் விலகிய செந்தில் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விமான நிலையம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்பரைக்கு செல்வீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பிற்கு செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன்” என்றார்.
இதன் பின்னர் ஓ பன்னீர்செல்வம் அணியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப .கிருஷ்ணன் பேட்டி அளித்தார். அவர் தெரிவித்ததாவது..
”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். அவரவர்
பாணியில் அவரவர்கள் இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வோம். இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு போனதால் எந்த பின்னடைவும் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக மட்டுமே உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தின் வெற்றிக்காக பரப்புரை செய்வோம் என்றார்.
ஓ பன்னீர் செல்வத்தை பாராட்டிய செங்கோட்டையன் மாப்பிள்ளைக்கு மிக்க நன்றி அவருக்கு திறந்த மனசு இருக்கிறது.” என கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
அவரிடம் எடப்பாடி பழனிச்சாமியை ஒ.பி.எஸ் சந்திப்பாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கு.ப.கிருஷ்ணன் ” எதுவும் நடக்கலாம். நாங்கள் எப்போதும் தோல்வியை கண்டு துவண்டு போவதும் இல்லை மகிழ்ச்சியை கண்டு பூரித்துப் போறவர்களும் இல்லை” என கூறினார்.
– யாழன்







