பஞ்சாப் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. நீண்ட நாட்களாக மாநிலத்தின்…

பஞ்சாப் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. நீண்ட நாட்களாக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதனிடையே காங்கிரஸ் மாநில தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் தலைவலியாக மாறியது. இதனிடையே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் சித்து அறிவித்தார். இதனால், அதிருப்தியடைந்த அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அடுத்த முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார். இவர் அம்ரீந்தர்சிங் அமைச்சரவையில், ஏற்கனவே தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக பணியாற் றியவர்.

புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, இன்று காலை 11 மணியளவில் பதவியேற்கிறார். அவருடன் 2 துணை முதலமைச்சர்களும் பதவி ஏற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சரண்ஜித் சிங் சன்னி, ருப்நகர் குருத்வாராவில் தரிசனம் செய்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.