ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மத்திய அரசு மாற்றியது நாகரீகமற்ற செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகப் பேட்டியளித்த அவர், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயரை மாற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, மறைந்த தலைவரின் பெயரில் விருது வழங்கும்போது, அந்தப் பெயரை மாற்றுவது நாகரீகமற்ற செயல். இந்தியாவில் ஒலிம்பிக்கை நடத்திக் காட்டியவர் ராஜீவ் காந்தி. அவரது மறைவுக்குப் பின்பு அவரது பெயரில் விளையாட்டுத்துறை வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருதை தேவை இல்லாமல் பிரதமர் மாற்றுவது அநாகரிகமானது.
கடந்த கால ஆட்சியாளர்கள் பெயர்களை மாற்றிக் கொண்டே சென்றால், இன்றைய ஆட்சியாளர்கள் வைக்கும் பெயரை வருகின்ற ஆட்சியாளர்கள் மாற்றுவதற்கு வழிவகை செய்யக் கூடாது. இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.







