அதிமுக சட்டமன்ற நிர்வாகிகளை மாற்றக்கோரி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
சட்டப்பேரவை சபாநாயகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கக் கோரி இபிஎஸ் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற கட்சியின் நிர்வாகிகளை மாற்றக்கூடிய வகையில் மனுக்கள் வந்தால் அதனை நிராகரிக்க வேண்டும். மேலும், பொதுக்குழு குறித்து நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் வழக்குகள் இருப்பதால் அதிமுக நிர்வாகிகளை மாற்றக்கூடிய மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை தேர்வு செய்துள்ளதாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார்.
அதில், தன்னை அதிமுக பொதுக் குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துவிட்டதாகவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்குவதற்கு பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இபிஎஸ்-ஐ கட்சியை விட்டு தான் நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
அதிமுக பொதுக்குழு நேற்று நடந்த அதே சமயத்தில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் உண்டானது. ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.