திருச்சியில் ராணுவ வீரர் மனைவியிடம் தங்க செயினை பறித்து சென்றவரை நான்கு மாதங்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமைந்துள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனைவி கலைவாணி. நீலமேகம் காஷ்மீரில் துணை ராணுவ படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 27 -ம் தேதி அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கலைவாணியிடம் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கலியை பறித்துக் கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார்.
இது குறித்து தகவல் அறிந்த கலைவாணியின் கணவர் நீலமேகம் காஷ்மீரில் இருந்து வாட்ஸப் வாயிலாக தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ராணுவ வீரர் நீலமேகம் மற்றும் கலைவாணியிடம் காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுக்கும், அதே வேலை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்து இருந்தார்.
இந்நிலையில் கலைவாணியிடம் தாலிசங்கிலி திருட்டில் ஈடுபட்ட நபர் தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற கண்ணன் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திருச்சி நீதிமன்றத்தின் வழியாக மணிகண்டனை ஜெம்புநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீஸ் காவலில் எடுத்தார்.
பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மணிகண்டன், பேரூர் கிராமத்தில் ராணுவ வீரர் மனைவி கலைவாணியிடம் தங்க செயினை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்தனர். 4 மாதங்களுக்கு பிறகு செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளது காவல்துறைக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








