மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இன்று (நவ.19) காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு சிம்லாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சென்னை திரும்பும் பொழுது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விவாதிக்க சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள தீர்மானங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநிலங்களில் இருந்து தீர்மானங்கள் குடியரசுத் தலைவருக்கோ, மத்திய அரசிற்கோ அனுப்பினால் நிராகரிக்கப்படுகிறது, ஏன் கால தாமதம் ஆகிறது என்பதற்கான விளக்கம் மத்திய அரசின் தரப்பில் இருந்து இல்லை. இதற்கான விளக்கத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பெரும்பாலான மாநில சபாநாயகர்களும் வரவேற்றனர்.
மேலும், மாநிலத்திலிருந்து ஒரு தீர்மானம் அனுப்பி வைத்தால், பதில் அளிக்க உரிய கால நிர்ணயம் அமைக்க வேண்டும் என்றும் சபாநாயகர்கள் மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றது வரவேற்க கூடிய விசயம், திமுக சார்பில் சட்டப்பேரவையில் ஆகஸ்டு மாதம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது போல பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், ஒரு முடிவை எடுக்க புள்ளி வைத்தால் போதும், பின் ஒரு நாளில் பலன் கிடைக்கும். தீர்மானம் நிறைவேற்றி மூன்று மாதங்களில் பலன் கிடைத்துள்ளது” என கூறினார்.