நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இடைக்கால பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வரி குறைப்பு, வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட் என்பதால் கொள்கை அளவிலும் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தான் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சார்பில் 2017 வரை பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என தனித்தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் சேர்க்கப்பட்டது. இதனால் ரயில்வே துறைக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு என்பவை பொது பட்ஜெட்டில் தான் இடம்பெறும்.
அந்த வகையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு என்று ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழகத்தில் பல்வேறு ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் இந்த நிதி மூலம் என்னென் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது பற்றிய விபரம் வெளிவரவில்லை. இதுதொடர்பான விபரங்கள் அடங்கிய ‛பிங்க்’ புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. ரயில்வே சார்பில் இந்த புத்தகம் வெளியான பிறகு எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது பற்றிய முழுவிபரம் அதில் இடம்பெறும்.
https://twitter.com/RailMinIndia/status/1753001589969658286?s=20







