மீண்டும் ஒரு மொழி போரை நடத்த மத்திய பாஜக அரசு வழிவகுப்பதாகவும், அவ்வாறு நடந்தால் விசிக தலைமையில்தான் நடக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ளப்பட்டத்தை கண்டித்து, சனாதனத்தை வேர் அறுக்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தொல்.திருமாவளவன், ஒவ்வொரு தேசிய இன மக்கள் தங்களுக்கு என ஒரு தேசம் அமைத்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. இந்திய ஆட்சி நிர்வாகம் கூட்டாட்சி அமைப்பு அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் உரிமைகள் அடிப்படையில் தான் இந்திய அரசு செயல்பட வேண்டும். ஆனால் மாநில அரசு கூடாது, மொழி உணர்வு, இன உணர்வு கூடாது என பாஜக நினைப்பதாக கூறினார். இந்திய ரூபாய் சரிவுக்கு மோடி அரசின் தவறான அரசியல் பொருளாதார கொள்கை தான் காரணம். கார்ப்பரேட் மற்றும் சனாதன ஆகிய இரண்டும் தான் மோடி அரசின் கொள்கை. தமிழ்நாட்டிலும் பாஜக வாலாட்டுகிறது. தமிழ்நாட்டில் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும் அதை மற்ற காட்சிகள் செய்கிறதோ இல்லையோ விசிக செய்யும் என்றார்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமூக வலைதளங்களில் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் அதை நான் ஒப்பு கொள்கிறேன். கட்டமைப்பு ரீதியாக சிறப்பாக உள்ளார்கள் ஆனால், அவர்களது சித்தாந்தம் ஆபத்தானது அதை நான் எதிர்க்கிறேன். பாரதியார் பாட்டு, திருக்குறள், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை இங்கு இருப்பவர்கள் எழுதி கொடுத்து, அதை பிரதமர் மோடி பேசுகிறார். இந்தி மொழியை நாம் காற்று இருந்தால் மோடி தனது பேச்சால் நம்மை மயக்கி இருப்பார். இங்கு பல தொகுதிகளை அவர்கள் பிடித்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். பாஜக, சாதி மத அடிப்படையில் இந்தியர்களை பிரிக்கிறார்கள். இதனால், மீண்டும் ஒரு மொழி போர் நடத்த மோடி அரசு வழி வகுக்க வேண்டுமா? என திருமாவளவன் கேள்வி எழுப்பினார். மீண்டும் ஒரு மொழி போர் நடக்கும் என்றால் அது விசிக தலைமையில்தான் நடைபெறும் என்றார்.
இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்திய கடற்படை மீது வழக்கு போட்ட தமிழக அரசை பாராட்டுகிறேன். தமிழக மீனவரை சுட்ட இந்திய கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறேன் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.








