பள்ளி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – என்ன விளக்கம் தரப்போகிறார் முதலமைச்சர்….? – பழனிசாமி கேள்வி….!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மீது சக மாணவர்கள் சாதிவெறியில் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் பதில் என்ன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று, 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், “தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது தான் சமூகநீதியா முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்களே?  இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது? இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?  பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும் இத்தாக்குதல் குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பழனிசாமி  “தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த முதல்வர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியில் அவர், “மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு பதிந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த  ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக” என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.