“ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – காங்கிரஸ் அறிவிப்பு

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பர்…

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி இருந்து வரும் நிலையில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க மாநில காங்கிரஸ், தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி மாநிலத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) முக்கியக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகள், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அசோக் கெலாட், மக்கள் நலத்திட்டங்களுக்காக பீகாரைப் போன்று ராஜஸ்தானிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை செய்ய முடியும் என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ராஜஸ்தானில் நடைபெறும் 6 முக்கிய பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக வருகிற திங்கள்கிழமையும் (09.10.2023) மாநிலத்தில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேற்று கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.