சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணிகளில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்திடவும், பேணி காத்திடவும் அரசு உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கும் போது, கிரிமி லேயரை நீக்கம் செய்யும் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IIT, AIIMS, IIM ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக முறைப்படுத்த தமிழ்நாடு அரசு வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு துறைகளில் வழங்கும் இட ஒதுக்கீட்டை போல, தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்ட வர வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்துவதற்கு ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் கொள்கை விளக்க குறிப்பில் உள்ளது.