திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே இந்திரா காலனி பகுதியில் நேற்று இரவு மதுபோதையில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மாற்றுத்திறனாளி உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையானது 14 தனிப்படை அமைத்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காவல்துறையானது கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் அதன்படி தென்னி மலையைச் சேர்ந்த கண்ணன், அந்தோணி மிக்கேல், சுப்பையா, கல்யாணி, நாங்குநேரியைச் சேர்ந்த ராஜா, நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் , வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த உச்சிமாகாளி ஆகிய ஏழு பேரும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நான்கு பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் மூன்று பேர் 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







