அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்து தேர்வெழுத அனுமதிக்க உத்தரவிடக் கோரி, கர்நாடகாவை சேர்ந்த மாணவிகள் சிலர் குழுவாக சென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பான வழக்கில் கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபரில் முந்தைய பெஞ்சின் இரு நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது எல்லோரும் அறிந்தது தான். அந்த இரு நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைப்பதை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா, பிப்ரவரி 6-ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளதால், இந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையே ஏற்று வழக்கை நீதிபதி சந்திர சூட் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதனையடுத்து மாணவிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாக்ஷி அரோரா, கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தொடர்ந்து தடை விதித்துள்ளதால் பெரும்பாலான மாணவிகள் சில தனியார் கல்லூரிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். “ஆனால், அரசு கல்லூரிகளில் மட்டுமே தேர்வு நடத்த முடியும்… தனியார் கல்லூரிகள் தேர்வு நடத்த முடியாது. அதனால் தான் இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம்” என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி “நான் விஷயத்தை ஆராய்ந்து ஒரு தேதியை ஒதுக்குவேன். இது மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விவகாரம். நீங்கள் பதிவாளரிடம் இதுபற்றி முறையிடுங்கள் ,” என்று கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய மீனாட்சி அரோரா பிப்ரவரி 6 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளதால், இந்த விஷயத்தை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடுமாறு அவர் கோரிக்கை வைத்தார்.
முன்னதாக கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை குறித்து உச்ச நீதிமன்றம் 2022 அக்டோபரில் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நிலையில், மற்றொரு நீதிபதி சுஷந்த் துலியா கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமில்லை என்றும், கர்நாடக அரசு அதிகாரத்தில் உள்ளது என்றும், இதனால் அவர்களது சுதந்திரமோ உரிமையோ பறிபோகாது என்றும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிபதி ஹேமந்த் குப்தா தனது தீர்ப்பில் தள்ளுபடி செய்தார்.
இருப்பினும், நீதிபதி சுஷந்த் துலியா பெஞ்சில் உள்ள மூத்த நீதிபதி மாறுபட்ட அனைத்து மேல்முறையீடுகளையும் அனுமதித்தார். நீதிபதி துலியா தனது தீர்ப்பின் செயல்பாட்டு பகுதியைப் படித்தபோது, ஹிஜாப் அணிவது ஒரு முஸ்லீம் பெண்ணின் விருப்பமான விஷயம், அதற்கு எதிராக எந்த தடையும் இருக்க முடியாது என்றார். மாநில அரசாங்கத்தின் தடை அறிவிப்பை ரத்து செய்த அவர், ஒரு பெண் குழந்தையின் கல்வி தொடர்பான கவலைகள் அவரது மனதை மிகவும் எடைபோடுவதாகவும், ஹிஜாப் மீதான தடை நிச்சயமாக அவரது வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
இந்த இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்துகளைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரம் பொருத்தமான பெஞ்ச் அமைப்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் தான் , தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி கோரி மாணவிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.