பாஜக – விசிக மோதல் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் உட்பட பாஜகவை சேர்ந்த 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது, நேற்று பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்தது.
இந்நிலையில், இன்று பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் 150 பேர் மீது கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147-ன் கீழ் சட்டவிரோதமாக கூடுதல், மற்றும் ஆயுதங்களுடன் கூடுதல், காயம் விளைவித்தல், 294b – ஆபாசமாக பேசுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதே 5 பிரிவுகளின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 50 பேர் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 30 பேர் மீதும் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







