நிலக்கரி சுரங்க விவகாரத்தில், டெல்டா பகுதிகளை விலக்கிட மத்திய அரசை வலியுறுத்தி, ரத்து செய்திட நடவடிக்கை எடுத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாயிகள் அமைப்பினரும் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி கடிதம் எழுதினார். அதோடு நின்று விடாமல் மறுநாள் (05.04.2023)சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த 3 நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார்.
இந்தநிலையில், நிலக்கரி சுரங்க விவகாரத்தில், டெல்டா பகுதிகளை விலக்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சரை சந்தித்தது யார் யார்?
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவரும், காவிரி விவசாயிகளின் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளருமான காவிரி தனபாலன், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளர் வி. சத்தியநாராயணா, காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத்தின் குரு கோபி கணேசன், நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க உறுப்பினர் சரபோஜி, தஞ்சாவூர் மாவட்டம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் வி கோவிந்தராஜ், தஞ்சை விவசாய சங்கத்தின் வி. ஜீவகுமார், திருச்சி மாவட்டம் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பூவை விசுவநாதன், கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோவில் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. கே.வி. இளங்கீரன், கடலூர் மாவட்டம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் அக்ரி கா. பசுமை வளவன், நாகப்பட்டினம் மாவட்டம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் மா. வினோத் குமார், நாகப்பட்டினம் மாவட்டம் பட்டதாரிகள் இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மா. பிரகாஷ் மற்றும் அரியலூர் மாவட்டம் காவிரி டெல்டா பாசன விவசாயிகள்சங்கத்தின் தலைவர் தங்க தர்மராஜன், கடலூர் மாவட்டம் – வீராணம் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. தமிழ்வளவன், கடலூர் மாவட்டம் – உழவர் மன்றத் தலைவர் குஞ்சிதபாதம், கடலூர் மாவட்டம் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் செல்வகுமார், கடலூர் மாவட்டம் கீழனை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்டம் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் கே. பிரபாகரன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சிந்தனைச் செல்வன். கோ.அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









