இலவச திட்டங்கள் தொடர்பாக குழு அமைக்கலாமே? உச்சநீதிமன்றம் யோசனை

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்த கோரி…

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதை முறைப்படுத்த கோரி பாஜகவைச் சேர்ந்த அஸ்வினிகுமார் உபாத்யாய் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் ஆணையம் மற்றும் குழு அமைத்தால் அதனை அரசியல் கட்சிகள் எதிர்ப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.மேலும், இலவசங்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு குழு அமைக்கலாமே என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஏன் விவாதிக்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இலவசங்கள் தொடர்பாக ஒரு முடிவை எட்டப்படுவதற்கு முன்பு ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை என்றும், தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள், கவனிக்கப்பட வேண்டிய அம்சம் எனக்கூறிய தலைமை நிதிபதி, இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர், நாளை ஆட்சிக்கு வரலாம் என்றும், அப்படி வருபவர்கள் இதை நிர்வகிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இலவச அறிவிப்புகளை வெளியிடுவது தனிநபர் அல்ல, அரசியல் கட்சிகள்தான் எனக்குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இலவச அறிவிப்புகளை அடிப்படை உரிமைகளாக கோரும் அரசியல் கட்சிகளும் நாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடைகோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.