சென்னையில் தொழிலதிபரை கடத்தி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை அபகரித்த விவகாரத்தில் 6 காவல்துறையினர் உட்பட 10 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக, காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மீது, ராஜேஷ் புகார் அளித்தார்.
இந்த நிலையில் புகாரை சிபிசிஐடி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை தொடர்ந்து சென்னை திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி,பாலா, சங்கர் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக பொய்யான ஆவணத்தை தயாரித்தது, மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.







