கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளார்.
இன்று காலை கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தும், பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு
தனியார் பேருந்தும் மேல்பட்டாம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் நிலைதடுமாறி சென்றது. அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். எதிரில் சீரற்று வந்த பேருந்து மோதாமல் இருக்க, ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரமாக ஓட்டினார்; இருந்தபோதும் முன் டயர் வெடித்து சீரற்று வந்த பேருந்து எதிரில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவ்வழியே சென்றவர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். இதில் படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறை வீரர்களோடு அப்பகுதியில் இருந்த இளைஞர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான
நிலையில் மீட்கப்பட்டார். இன்று காலை 10 மணிக்கு விபத்து நடந்ததை தொடர்ந்து
காலை 11.30 மணிவரை மீட்பு பணிகள் நடந்தது. மீட்பு பணிகள் முடிந்த
பிறகே, எத்தனை பேர் உயிரிழந்தனர். அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்,
படுகாயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதை சரியாக சொல்ல முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த பயணிகளின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் மருத்துவமையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் பலியான 5 பேர்களில் 3 பேர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்த சீனுவாசன் என்பதும், மற்றொருவர் தனியார் பேருந்து ஓட்டுநர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த
அங்காளமணி என்பதும், மேலும் ஒருவர் சுகம் பேருந்து நடத்துனர் முருகன் என்பதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தால் பண்ருட்டி-கடலூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல்
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத்தொகையை அறிவித்தார்.







