பிரிட்டன் பிரதமர் தேர்தல் – 3வது சுற்றிலும் ரிஷி சுனக் முதலிடம்

பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான அடுத்த கட்ட வாக்கெடுப்பிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் போட்டியாளர்கள் எண்ணிக்கையும் 4ஆக குறைந்துள்ளது. பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர்…

பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான அடுத்த கட்ட வாக்கெடுப்பிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முதலிடம் பிடித்துள்ளார். அத்துடன் போட்டியாளர்கள் எண்ணிக்கையும் 4ஆக குறைந்துள்ளது.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து கட்சியின் புதிய தலைவர் மற்றும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் இந்த தேர்தல் பல சுற்றுகளை உள்ளடக்கியது.

குறைந்தது 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர்கள் மட்டுமே பிரதமர் தேர்தலில் போட்டியிட முடியும். முதல் சுற்றில் 30 எம்பிக்களுக்கு குறைவாக வாக்குகள் பெறுபவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

ஒவ்வொரு சுற்றிலும் குறைவான வாக்குகளை பெறுபவர்கள் போட்டியில் நீக்கப்பட்டு இறுதியாக 2 போட்டியாளர்கள் எஞ்சும் வரை எம்பிக்கள் வாக்கெடுப்புகள் நடைபெறும்.
இறுதியில் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.6 லட்சம் கன்செர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்து இந்த 2 போட்டியாளர்களில் ஒருவரை கட்சித் தலைவராக தேர்தெடுப்பார்கள். அவரே நாட்டின் பிரதமராகவும் நியமிக்கப்படுவார்.

இரண்டாவது இடம் பிடித்த பென்னி மோர்டான்ட்

இரண்டாவது சுற்று வாக்குகள் முடிவில் மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 6 ஆக குறைந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 3வது சுற்று வாக்கெடுப்பிலும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் முதலிடம் பிடித்தார்.

357 எம்பிக்கள் வாக்களித்தனர். இதில் ரிஷி சுனக் 115 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். வர்த்தக் செயலர் பென்னி மோர்டான்ட் 82 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் 71 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தையும் பிடித்தனர். மற்றொரு போட்டியாளரான கெமி படேனோச் 58 வாக்குகள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.

இந்த நால்வரும் 4ஆவது சுற்று வாக்குப் பதிவில் பங்கேற்பார்கள். இன்று 4வது சுற்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நாளை கடைசி மற்றும் 5வது சுற்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கடைசி வாக்கெடுப்பில் 2 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.