மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அவர் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார் என உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரை சேர்ந்தவர் நடராஜன்…

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு
கிடைத்துள்ளது. அவர் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார் என உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தனர். 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரை சேர்ந்தவர் நடராஜன் மகன் வள்ளல் பெருமான் (வயது 42). இவர் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார் கோவில் கடை வீதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி பலத்த அடிபட்ட நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையும் படிக்கவும் : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை மூளை சாவு நிலையை அடைந்தார். இதுகுறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் மருத்துவர்கள் விவரித்தனர். இதனையடுத்து அவரது மனைவி சுமதி உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தார்.


அதன்படி, கல்லீரல், சிறுநீரகம், கண், இதயம், நூரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பாண்டிச்சேரி, சென்னை, ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 9 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. மூளைச்சாவு அடைந்து 9 பேருக்கு மறு வாழ்வு அளித்த அவரின் குடும்பத்தினரை மருத்துவர்கள் பாராட்டினர்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், உதவி என கேட்டால் உடனடியாக செய்யும் குணமுடையவர் தான் வள்ளல் பெருமான். படிப்பு, விவசாயம் ஆகியவற்றின் மீது அதிக ஆர்வம் உடையவர். அதுபோல அவரிடம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல விழிப்புணர்வு பாடங்களை கற்றுத் தருவார்.இன்றும் அவர் இறக்கவில்லை. 9 பேரிடம் வாழ்ந்து வருகிறார். அதுபோல அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் நாங்களும் இனி அனைவரிடமும் சென்று உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் இது அவரின் ஆசையில் ஒன்று என தெரிவித்தனர்.

வள்ளல் பெருமான் என்ற பெயருக்கு ஏற்றார் போல் வள்ளலாகவே இறந்த அவரை காண பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.