ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சென்னை – இலங்கை தலைமன்னார் இராமேஸ்வரம் போட் மெயில் இரயில் சேவையும், அதன் தொடர்ச்சியாக கப்பல் சேவையையும் மீண்டும் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடல்சார் வாரியக்குழுவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 93 ஆவது கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர், “சென்னையில் இருப்பது போல் மற்ற இடங்களிலும், பொதுமக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு வசதிகள் தற்போது இல்லாத நிலை உள்ளது. எனவே, பிற இடங்களிலும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டியது அவசியமாகிறது.
கடற்கரைகளில் ஓயாத அலைகளும் , நீலக்கடலும் மக்களுக்கு கண்கொள்ளா காட்சிகளாக அமைந்திருப்பது இயற்கை நமக்கு வழகியுள்ள செல்வமாகும். கடற்கரைகளையும் , கடல் அலைகளையும் , நீண்டு , பரந்து , விரிந்துள்ள நீலக்கடலையும் , கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து மகிழும் மக்களுக்கு பாதுகாப்புடன்கூடிய நீர் விளையாட்டுகள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் கடற்கரை பகுதிகளில் அமைத்துக்கொடுத்தால் மக்கள் மேலும் , உற்சாகம் அடைவார்கள் என்பது என் எண்ணம்.
கடலின் ஆழம் , கடல் அலைகளின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப எங்கெல்லாம் படகுப்போக்குவரத்து நடத்த அனுமதிக்கலாமோ அங்கெல்லாம் ஆய்வு செய்து படகு போக்குவரத்துகளை அனுமதிப்பது குறித்து பரிசீலணை செய்யலாம். இதற்கு முன் உதாரணமாக இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் 2010ம் ஆண்டு படகு போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு , நடத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ளதுபோன்று நீர் விளையாட்டுகள், போட்டிங் போன்றவற்றை தனியார் முதலீடு மூலம் மேற்கொள்ளலாமா ? என்பதை இந்த வாரியம் ஆய்வு செய்ய வேண்டும். சிறிய கப்பல் மூலம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு துறைமுகத்திற்கும் உல்லாசப்பயணம் போய்வர அனுமதிக்க முடியுமா என்பதையும் இந்த வாரியம் பரிசீலிக்க வேண்டும்.
சென்னையிலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு நேரடியாக செல்லும் வகையில் இராமேஸ்வரம் போட் மெயில் இரயில் சேவையும், அதன் தொடர்ச்சியாக கப்பல் சேவையும் நடைமுறையில் இருந்தது. தற்போது, அத்தகைய இரயில் சேவையை தொடங்குவது குறித்தும் வாரியம் ஆய்வு செய்ய வேண்டும்.” என பேசினார்.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் , கடல்சார் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கே. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








