5 மாநில தேர்தலில் பாஜகவே வெற்றிபெறும் என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதிதாக எந்த விஷயத்தையும் செய்யாமல், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஆவினில் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளது. தற்போது டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலையை உயர்த்தி விட்டனர். அதில் கிடைக்கும் வருமானமான 2ஆயிரம் கோடியை வைத்துதான் அரசாங்கத்தை நடத்த இருப்பதாகவும் கூறுகின்றனர்” என்று பேசினார்.
தொடர்ந்து பட்ஜெட் குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அடுத்து வருகின்ற தமிழக பட்ஜெட்டில் மிகப்பெரிய விலை உயர்வு, வரி உயர்வு மட்டும்தான் காண முடியும். இதையெல்லாம் பார்க்கும் போது இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பொருட்களின் விலையையும் அரசு உயர்த்தும் என்பது தெரிகிறது. புதிதாக எந்த சிந்தனையும் இல்லாமல் அரைத்த மாவையே அரைத்து கொண்டுள்ளது திமுக அரசு என்று திமுக அரசு மீது குற்றம் சாட்டினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், 5 மாநில தேர்தல் முடிவுகள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும். உத்தரபிரதேசம், உத்தர்காண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனில் இருந்து தமிழகம் வரும் மாணவர்களின் கோரிக்கைகள் எந்தவிதமான கோரிக்கைகளாக இருந்தாலும் மத்திய அரசு அதை பரீசிலிக்கும். பிரதமர் மோடியின் எண்ணமே நூறு சதவீதம் இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்பதுதான். மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட பிறகு மத்திய அரசு நல்லதொரு முடிவை எடுக்கும்” பேசினார்.







